மயிலாடுதுறை, ஜூன் 8- நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் ஆணவத்தை மக்கள் அடித்து தவிடு பொடியாக்கிவிட்டனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மோடி தான் நினைத்ததையெல்லாம் இனி செய்ய முடியாது. 3 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும், தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் கூட்டணி கட்சிகளை சார்ந்து இருக்கும் நிலையை மக்கள் உருவாக்கியுள்ளனர். மோடி தனது சொந்த தொகுதியிலேயே வாக்குகளை குறைவாக பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் மக்கள் விரோத திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தியதற்கு தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சியினர் 234 இடங்களை வென்றுள்ளனர். பாஜகவின் மோசமான நடவடிக்கைகளை நாடு முழுவதும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவது மட்டுமின்றி மக்களவையில் போராடுவதற்கும் வலுவான எதிர்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இந்திய அரசியலை தீர்மானிக்கும் அளவுக்கு தமிழகம் உயர்ந்துள்ளது.
நீட் தேர்வு மிகப்பெரிய அளவில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறுவது போன்ற பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு வேண்டுமா,? வேண்டாமா என்பதை அந்தந்த மாநில அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும். தொடர்ந்து நீட் தேர்வால் சர்ச்சைகள் நீடித்துக்கொண்டிருக்கிறது.
கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய பங்கு தண்ணீரை உரிய நேரத்தில் தர வேண்டும். அப்போதுதான் குறுவை சாகுபடிக்கு பயன்படும்.
மழைக்காலத்தில் நீரை திறந்து பயன் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒன்றிய அரசும், காவிரி மேலாண்மை வாரியமும் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை பெற்றுத்தர வேண்டும்.
ஒரு நாடு, ஒரே தேர்தல், எம். பி.க்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் போன்ற மோடியின் எந்த திட்டமும் நிறைவேற வாய்ப்பே இல்லை. கூட்டணியில் உள்ள சந்திரபாபுநாயுடு கூட அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்.இந்த கூட்டணி அரசு எத்தனை நாள் நீடிக்கும் என்பதை பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.